அகமுடையார் குலத் திலகம்-தென்னாட்டு ஜவஹர்-பட்டுக்கோட்டை வள்ளல், ஸ்ரீமான் வை.நாடிமுத்துப்பிள்ளை அவர்கள் (1902 -1954)

பொன்னி நதி பாயும் வளம் கொழிக்கும் சோழ மண்டலத்தில் ஒர் அங்கமான பட்டுக்கோட்டையில் தோன்றி, சிறந்த பொது வாழ்வு வாழ்ந்து - பொது மக்களால் "தென்னாட்டு ஜவஹர்" என்று அழைக்கப்பட்டவர் பட்டுக்கோட்டை வை.நாடிமுத்துப் பிள்ளை (1902 -1954) அவர்கள்,

அவருடைய பொது வாழ்க்கை பணிகளை சுருக்கமாக காண்போம்.



பிறப்பு

1902 ஆம் ஆண்டு அக் -29,
வைத்தியலிங்கத் தேவர்- கோவிந்தம்மாள் தம்பதியினருக்கு மூன்றாவது மகனாக பிறந்தார்.

திரண்ட சொத்துக்கும் மிகுந்த புகழுக்கும் உரியவரான திரு ஆ.பழனியப்ப தேவரின் பேரனான ஸ்ரீமான் வை.நாடிமுத்துப் பிள்ளை அவர்கள், தனது தாத்தாவின் மறைவுக்கு பின்னர் இந்த பெருநிதிக்கு உரியவரானார் என்றாலும் வசதி, வாய்ப்பு, செல்வம், செழிப்பு போன்றவைகள் மேலேங்கிய குடும்பத்தில் பிறந்தும் சிறைவாசம் என்ற போது சிரித்த முகத்தோடு ஏற்று தியாக செம்மலாக தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டார்.

நாடிமுத்து பிள்ளை அவர்களின்
இளமைக் காலம்,

தம் ஆரம்ப கல்வியை வாரியப் பள்ளி (Board School) பயின்றார். பிறகு தனிப்பயிற்சி மூலம் (Tution) ஆங்கிலததில் சரளமாக பேசும், எழுதும் திறன் பெற்றார். இளம் வயதிலேயே இங்கிலாந்து, சிங்கப்பூர், மலேசியா, வியட்நாம் நாடுகள் சென்றார். பல உலக அனுபவங்களை பெற்றார்.

திருமணம் வாழ்க்கை,

திருவாரூர் அருகே குளிக்கரை திரு.வைத்தியலிங்கம் பிள்ளை - அங்கயர்கண்ணி தம்பதியினரின் புதல்வி திருமதி கனகாம்புஜம் என்ற அம்மையாரை இல்வாழ்க்கை துணையாக ஏற்றார். இவர்களுக்கு நான்கு மக்கள் செல்வங்கள், முதலாமவர் விஜயலட்சுமி, அடுத்து V.N.சுவாமிநாதன், அடுத்து சந்திரலேகா, அடுத்து கோவிந்தம்மாள் (எ) சித்ரா ஆகியோர்கள் ஆவார்கள்.

இதில் V.N.சுவாமிநாதன் அவர்கள், 1980 புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்டு  நாடாளுமன்ற உறுப்பினராக (MP) வெற்றி பெற்று தனது தந்தைக்கு சற்றும் குறைவில்லாமல் மக்கள் சேவை செய்தார்.

அரசியல் ஈடுபாடு,

மிக சிறிய வயதிலேயே அரசியல் வானில் ஜொலிக்க ஆரம்பித்தார். மிகவேகமாக அரசியலில் ஈடுபட்டு தன்னம்பிக்கையுடன் தான் ஈடுபட்ட காரியத்தில் முழுமூச்சுடன் ஈடுபட்டு வெற்றி ஒன்றையே குவித்தார். இதை தனது இறுதி காலம் வரையில் தொடர்ந்து நிலைநாட்டி வந்தார்.

சமுதாயப் பணி (1926-1954),

தாம் பிறந்த அகமுடையார் குலத்தின்  முன்னேற்றத்திற்காக 1926 ஆம் ஆண்டு, திருத்துறைப்பூண்டியில் சென்னை மாகாண அகமுடையார் மகாசன சங்கம் என்ற அமைப்பை தோற்றிவித்து அதன் நிறுவனத் தலைவராக சிறப்பாக செயலாற்றினார். திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை, மதுரை, இராமநாதபுரம் என 1926, 1929, 1931, 1932 என நான்கு மாநில மகாநாடுகளை சீரும்சிறப்புமாக நடத்தி அகமுடையார் சமூகத்தை ஒருங்கிணைத்தார்.

காங்கிரஸ் பேரியக்கத்தில் இணைப்பு,

இந்திய நாடு வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு அடிமைப் பட்டு இருந்த காலம், மக்களிடம் சுதந்திர உணர்வு கொழுந்து விட்டு எரிந்த காலம். அடிமை இருளைப் போக்க பாடுபட்டது காங்கிரஸ் பேரியக்கம். தென்னகத்தில் காங்கிரஸ் கட்சியினை வலிமைப்படுத்துவதற்காகவும் மக்களிடையே ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான விழிப்புணர்வை ஊட்டுவதற்காகவும், டாக்டர் இராஜேந்திர பிரசாத் தென்னாட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டார். 1935 ஆம்  ஆண்டு பட்டுக்கோட்டைக்கு வந்தார். நீலா திரையரங்கத்தில் பாபு இராஜேந்திர பிரசாத் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக இணைந்தார்.

தனி நபர் அறப்போராட்டம் (1940),

தனி நபர் அறப்போராட்டம் என்ற போராட்டத்தினை காந்தியடிகள் தொடங்கினார். இந்த போராட்டத்திற்கு ஆட்களை தேர்ந்தெடுத்த விதமே வித்தியாசமானது. காந்தியடிகள் யாரை குறிப்பிடுகிறாரோ அவர் மட்டுமே போராட்டம் செய்து  சிறை செல்லவேண்டும் என்ற நியதி வைத்திருந்தார். அண்ணல் காந்தியடிகள் உத்திரவின்படி தஞ்சை-திலகர் திடலில், வை.நாடிமுத்துப் பிள்ளை தனி நபர் சத்யாகிரகம் செய்து 6 மாதம் சிறை தண்டனை பெற்றார்.

நாடியம்பாள் பேங்க் லிமிடெட் (1938-1954),

பின்தங்கிய மக்களை சேமிப்பில் ஊக்குவிக்க நாடியம்பாள் பேங்க் லிமிடெட் என்னும் வங்கியைத் துவங்கி அதற்கு தாமே தலைவராக இருந்தார். இந்த வங்கிக்கு 9 கிளைகள் இருந்தன வை.நாடிமுத்துப் பிள்ளை மறைவுக்கு பின் தற்போதைய லெட்சுமி விலாஸ் பேங்குடன்  இணைக்கப்பட்டது.

பதவி மறுப்பு,

1952 ஆம் ஆண்டு மீண்டும் தமிழக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு அப்போதைய முதல்வரான இராஜாஜி அவர்களால் தனது அமைச்சரவையில் விவசாயத்துறை அமைச்சராக பதவி ஏற்க அழைக்கப்பட்ட போது தனது மாவட்ட அளவில் தோய்வின்றி தொண்டாற்ற எண்ணி தனது உடல்நலக் குறைவை காரணம் காட்டி பக்குவமாக மறுத்து ஒதுங்கினார்.

பல முறை மத்திய மந்திரி ஆகும் வாய்ப்பு வந்தபோதும் மறுத்தவர்,  

இந்திய துணைக் கண்டத்தின் இராஜதந்திரியும், சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலும், தமிழகத்தின் மூதறிஞருமான இராஜாஜி அவர்களின் நம்பிக்கைக்கு உரியவராகவும், ஒத்த கருத்துக்களை பரிமாறிக் கொள்ளக்கூடிய ஆலோசகராகவும் வை.நாடிமுத்துப் பிள்ளை விளங்கினார்.

முன்னாள் குடியரசு தலைவர் உயர்திரு ஆர்.வெங்கட்ராமன் அவர்களின் அரசியல் ஆசானே வை.நாடிமுத்துப் பிள்ளை என்றால் மிகையாகாது. காமராசர் அவர்கள் வை.நாடிமுத்துப் பிள்ளை அவர்களிடத்தில் தஞ்சை பாராளுமன்ற தொகுதியில் ஆர்.வெங்கட்ராமனை வெற்றி பெறவேண்டும் எனறு கோரினார்.  இத்தேர்தலில் வை.நாடிமுத்துப் பிள்ளை அவர்களின் ஆருயிர் நண்பர் மாவூர் சர்மா அந்த தேர்தலில் நின்றும் கூட கட்சி பெரிதென மதித்து ஆர்.வெங்கட்ராமனுக்கு வெற்றியை தேடித்தந்தார்.

வை.நாடிமுத்துப் பிள்ளை, சோழ மண்டலத்தின் தனிப்பெரும் தலைவராக தமிழக அரசியலின் தட்பவெட்ப நிலையறிந்து அரசியல் சதுரங்க காய்களை நகர்த்தி வெற்றி ஒன்றை மட்டுமே தனது வாழ்நாள் முழுவதும் பெற்று வாகை கூடியவராக விளங்கினார்.

அரசியல் வாழ்க்கையில் தோல்வியே அடையாதவர்

மக்கள் பணி,

தாலுக்கா போர்டு தலைவர் (1927),

நாட்டுக்கு உழைப்பது, நலிந்தோருக்கு உதவுவது நல்லோருக்கு துணை நிற்பது போன்ற நற்பண்புகளை இளமையிலே பெற்ற வை.நாடிமுத்துப் பிள்ளை அவர்கள் பொது வாழ்வுக்கு தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டே வளர்ந்தார்.

அதனால்தான் தனது 25 வது வயதிலேயே 1927 ஆம் ஆண்டு தாலுக்கா போர்டு  (Taluk Board)  தேர்தலில் நீதிக்கட்சி வேட்பாளர் திரு. வேணுகோபால் நாயுடு அவர்களை எதிர்த்து சுயேட்சையாக நின்று வெற்றி பெற்றார்  ஸ்ரீமான் வை.நாடிமுத்துப் பிள்ளை அவர்கள்.

இப்பதவியை பயன்படுத்தியே காடாகக் கிடந்த பட்டுக்கோட்டை தாலுக்காவை நாடாக மாற்றினார். ஆரம்ப பாடசாலைகள், சுகாதார நிலையங்கள், சாலை வசதிகள் போன்ற எண்ணற்ற வசதிகளை செய்து கொடுத்தார்.

ஜில்லா போர்டு உறுப்பினர்,

அடுத்து நீதிக்கட்சியின் சார்பில் மாவட்ட வாரிய உறுப்பினர் (District Board Member) ஆக இருந்த பாப்பா நாடு ஜமின்தார் துரைராசு அவர்களை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிட்டு ஜில்லா போர்டு உறுப்பினாக வெற்றிபெற்றார்.

ஜில்லா போர்டு தலைவர் (1933-1952)

1933 ஆம் ஆண்டு மிகவும் பரபரப்பாக நடைபெற்ற தஞ்சை மாவட்ட வாரிய தலைவர் (District Board Chairman) தேர்தலில் நீதிக்கட்சியின் மிக செல்வாக்கான தலைவரும், நீதிக்கட்சியின் சார்பாக 10 ஆண்டுகள் மாவட்ட வாரிய தலைவராக இருந்த திருவாளர் சர் ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்களை தோற்கடித்து ஜில்லா போர்டு தலைவரானார்.

பிரிக்க படாத பழைய தஞ்சை மாவட்ட நிர்வாக ஆட்சிக்குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டும் அதன் பின்னும் 1933 முதல் அவரின் இறுதி காலம் வரையில் 1952 வரை சுமார் 19 ஆண்டுகள் மாவட்ட ஆட்சிக் குழு தலைவராக போட்டியின்றி தேர்ந்தேடுக்கப்பட்டார்.

தஞ்சை மாவட்ட ஆட்சி குழுத் தலைவராக (District Board Chairman)  ஆட்சி செய்த காலக்கட்டத்தில்தான் எண்ணற்ற பணிகளை மேற்கொண்டார்.

போக்குவரத்து வசதிகள், சாலைகள், மேம்பாலங்கள், இரயில்வே, மருத்துவம், தொடக்கப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், மாணவர் விடுதிகள், தொழில் கல்வி, தொழில்சாலைகள், நீர்ப் பாசனவசதிகள், குடிநீர் வசதிகள், குடியிருப்பு வசதிகள், கல்வி வளர்ச்சிப் பணி, நூல் நிலையங்கள், கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு அங்காடிகள் போன்ற பல்வேறு வசதிகளை செய்து கொடுத்த பெருமை வை.நாடிமுத்துப் பிள்ளை அவர்களையே சாரும்.

அன்றைக்கு உள்ளாட்சி அமைப்புகளில் மாவட்ட வாரியம் (District Board) என்பது முக்கியமானது.அதிக அதிகாரங்கள் கொண்டது. மாவட்ட வாரிய தலைவரை (District Board Chairman) மாவட்ட ஜனாதிபதி (District President) என சொன்னால் கூட மிகையாகாது.

அன்றைய பிரிக்கப்படாத மிகப் பெரிய தஞ்சை மாவட்ட வாரியத் தலைவர் பொறுப்பையேற்ற பின் பல பயனுள்ள நற்பணிகளை,  தஞ்சை மாவட்டத்திற்கு செய்தார் வை.நாடிமுத்து பிள்ளை.

1) தஞ்சை மாவட்டத்தில் முதன் முதலாக  அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கூடத்தினை பட்டுக்கோட்டைக்கு  கொண்டு வந்தவர்.

2) ஜில்லா போர்டு பொது நிதியிலிருந்து 18 உயர்நிலை பள்ளிகள் நடத்தப்படுகின்றன. இவற்றுள் ஒன்று பெண்களுக்கானது. இதற்கு 2,80,000/- ரூபாய் ஜில்லா போர்டு நிதியிலிருந்து தருவித்தார்.

3) சித்த மருந்துகள் தயார் செய்யும் உற்பத்தி நிலையம் தஞ்சையில் ஆரம்பித்தார்.

4) அறந்தாங்கி, பட்டுக்கோட்டை பகுதிகள் பாசன வசதி பெற மைசூர் அரசோடு போராடி மேட்டூர் நீர்பாசனத் திட்டம் கொணாடுவர தனது செல்வாக்கை பயன்படுத்தி வெற்றிக் கண்டார்.

5) வல்லம் செல்லும் கல்லூரி சாலையில் தொழிற்பயிற்சி தொடங்கி பலரின் வாழ்வில் கல்வி தீபம் ஏற்றினார்.

6) இரயில்வே நிர்வாகம் நட்டம் வரும் என்று மறுத்து ஒதுக்கிய திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மாயவரம், பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி இரயில் பாதை திட்டத்தை போராடி கொண்டுவந்தார்.

7) செங்கிப்பட்டியில் காச நோய் மருத்துவமனை திறக்கச் செய்தார்.

8 சத்திரம் நிர்வாகத்தை செப்பனிட்டு அதன் வருவாயை இராஜா மடம், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, திருவாரூர், நீடாமங்கலம் போன்ற ஊர்களில் சத்திர நிதியிலிருந்து இயங்கிய பள்ளிகளை சீர்செய்து பல ஏழைகளும் உணவு, உறைவிடம் வசதிகளோடு கல்வி பெற வைத்தார்.

9) தஞ்சைக்கு மருத்துவக் கல்லூரி வருவதற்கு வை.நாடிமுத்துப் பிள்ளை அவர்களே மூலக் காரணம். இரயில்வே போர்டு சேர்மனாக இருந்தபோது தஞ்சை ஜில்லா போர்டுவிற்கு இரயில்வே துறையின் மூலம் வரும் cess வரி மூலம் இவர் சேர்த்த பணத்தை வைத்துதான் தஞ்சை மருத்துவக்கல்லூரி தொடங்கப்பட்டது.

10) தஞ்சை மாவட்டம் முழுக்க சாலைகள் போடப்பட்டது. பல பாலங்கள் கட்டப்பட்டது.
திருவையாற்றுக்கு வடபாலுள்ள விளாங்குடி-திருமானூரை இணைக்கும் பெருஞ்செலவிலான கொள்ளிடம் ஆற்றுப்பாலம் இவரின் பங்கே,

11) கல்லணை கால்வாயில் புது கால்வாய் எனப்படும் பகுதி இவரால் உருவாக்கப்பட்டது,

பல வாய்க்கால் வெட்டப்பட்டன.

தஞ்சை நகர குடிநீர் வசதித் திட்டம்.

பட்டுக்கோட்டை தண்ணீர் வசதித் திட்டம்,

அறந்தாங்கி தண்ணீர் வசதித் திட்டம்,

12) பட்டுக்கோண்டை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானம், நாடியம்மன் மண்டகப்படி  கட்டிடம் உட்பட பல பொது இடங்கள் இவர் மக்களுக்கு தானமாக வழங்கியது குறிப்பிடத்தக்கது,

13) பட்டுக்கோட்டை நகரத் தெய்வமான நாடியம்மன் கோவிலுக்கும், மற்ற கோவில்களுக்கும் செய்துள்ள தான, தர்மங்களைக் கணக்கிட முடியாது.

பள்ளிகள், சாலைகள், இருப்பு பாதைகள், என பலவித திட்டங்களை கொண்டு தஞ்சை மண்டலத்தை மேன்மை படுத்தியது இவரின் சாதனை சரித்திரத்தை அடுக்கிக் கொண்டே போகலாம்.

பட்டுக்கோட்டை வை. நாடிமுத்து பிள்ளை அவர்களை அலங்கரித்த பதவிகள்,

பரம்பரை நிர்வாக அறங்காவலர் - பழனியப்பத்தேவர் அறநிலையம்
(1921-1954).

நிறுவனர் & தலைவர் - சென்னை மாகாண அகமுடையார் மகாசன சங்கம் (1926 -1954).

சட்டமன்ற மேலவை உறுப்பினர் - MLC (1931)

தலைவர் - தாலுக்கா போர்டு
(Taluk Board) (1927).

தலைவர் -தஞ்சை மாவட்ட நிர்வாக ஆட்சிக்குழு (1927-1933),

சட்டமன்ற மேலவை உறுப்பினர் - MLC (1931)

தலைவர் - தஞ்சை ஜில்லா போர்டு
(District Board) (1933-1952).

சட்டமன்ற உறுப்பினர் (MLA) - தஞ்சை கிராமப்புறம் (1937-1939),

பொருளாளர் - ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி (1936),

மாநில பொருளாளர் -
தமிழ்நாடு  காங்கிரஸ் கமிட்டி (1940),

நிறுவனர் & தலைவர் - நாடியம்பாள் பேங்க் லிமிடெட் (1938 - 1954).

தலைவர் - தஞ்சை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி (1942 - 1954).

தலைவர் - தஞ்சை மாவட்ட சர்வோதய சங்கம் (1944 - 1954).

நாடாளுமன்ற மேலவை உறுப்பினர்-MP (1950-1952)

உறுப்பினர் - இந்திய அரசியல் நிர்ணய சபை (1950-1952).

சட்டமன்ற உறுப்பினர் (MLA) - பட்டுக்கோட்டை (1952-1954),

உறுப்பினர் - இந்திய அரசின் இந்தோனேஷியா நல்லெண்ண தூதுக் குழு,

தலைவர் - தஞ்சாவூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி (20 ஆண்டுகள்)

தலைவர் - பட்டுக்கோட்டை நகர மத்திய கூட்டுறவு வங்கி,

பொருளாளர் - அன்னை கஸ்தூரிபாய் அறக்கட்டளை,

உறுப்பினர் - மத்திய ஆலோசனைக் கமிட்டி (சென்ரல் கவுன்சில்)

உறுப்பினர் - இரயில்வே போர்டு,

தஞ்சை மாவட்டத்திற்கு இவர் ஆற்றிய பணிகள் எண்ணில்  அடங்கா,

மறைவு,

"சென்றவிடத்தால் செலவிடாது தீது ஓரிஇ
நன்றின் பால் உய்ப்பதறிவு"

என்ற குறளின்படி,
அன்பு, நாண், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை எனும் ஐந்தறமும் குன்றாது தமக்குரிய நிலைகளில் நின்று கடமைகளைப் புரிபவரே தாக்கரென்றும், சான்றோர் என்றும் கருதும் தமிழ் மரபுக்கு ஏற்ப அனைத்து குணநலன்களையும் பெற்றவராக வை.நாடிமுத்துப் பிள்ளை விளங்கினார். இத்தகைய மாமனிதர் தஞ்சை மாவட்ட மக்கள் விழியும், நெஞ்சமும் கலங்க 1954 ஆம் ஆண்டு, அக்டோபர் -26 ஆம் நாள் தமது பொன்னுடல் பூத்து புகழுடம்பு  எய்தினார்.

இவரது வரலாற்றை விரிவாக கூற இந்த பக்கங்கள் பத்தாது. தனி நூலாகதான் வெளியிட வேண்டும். அதுவும் விரைவில் அகமுடையார் அரண் சார்பாக வெளிவரும்

அறக்கொடை,

"ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம்" என்ற பொன்மொழிக்கு ஏற்ப, எண்ணம் கொண்ட இவர், தம் வருமானத்தை ஏழை, எளிய மக்களுக்கு வழங்குவதிலே செலவழித்தார். தனது பாட்டனார் பழனியப்பத் தேவர் பெயரில் அறநிலையம் நிறுவி அதன் மூலம் பட்டுக்கோட்டையில் சத்திரம் கட்டி ஏழை எளியவர்கள் அனைவரும் இரண்டு வேளை உணவு அளிக்கக்கூடிய வாய்ப்பினை ஏற்படுத்திக் கோடுத்தார்.

இன்றும் VNS சத்திரம்,! பழனியப்பத்தேவர் அறநிலையத்தில் தினமும் 300 நபர்களுக்கு இலவச உணவு அளிக்கப்படுகிறது என்றால் இவரது மதிப்பினை அறியலாம்,

நாடிமுத்து பிள்ளை அவர்கள் மறைவுக்குபின் அவரது அருந்தப்புதல்வர் V.N.சுவாமிநாதன் EX.MP., அவர்கள் அறப்பணியை தொடர்ந்து நடத்தி வந்தார். அவரின் மறைவிற்கு பின்,

அவரது திருமதியான, அம்மா விஜயலட்சுமி V.N.சுவாமிநாதன் அவர்கள், பரம்பரை அறங்காவலராக இருந்து அறப்பணியை தொடர்ந்து செய்து வருகிறார்.

தெய்வீகத்திருமகன் வை.நாடிமுத்து பிள்ளை அவர்களின் 66 ஆம் ஆண்டு நினைவு தினமான அக்-26 அவரை போற்றி வணங்குகிறது.

"அகமுடையார் அரண்"

நமது சமுதாயத்தில் தோன்றி, புகழின் சிகரத்தைத் தொட்டு, ,தானுயர்ந்தது போல தன் சமுதாயமும் உயர வேண்டும் என்று எப்போதும், ஒப்பேதும் இல்லா உழைத்துச் சிறந்து, உயர்ந்து நிறைந்த பட்டுக்கோட்டை வை.நாடிமுத்துபிள்ளை அவர்களைப் போல நமது சமுதாயத்தில் இளைஞர்கள் பலர் தோன்ற வேண்டுமென வேண்டி, அன்னாரின் புகழ் எந்நாளும் வாழ்க! வாழ்க!! என்று கூறி நிறைவு செய்கிறேன்.
நன்றி, வணக்கம்.

கட்டுரையாக்கம்,

சோ.பாலமுருகன் அகமுடையார்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
அகமுடையார் அரண்,
9442938890.


 


 

Comments

Popular posts from this blog